ராணுவம் தொடர்பான பென்டகன் அறிக்கை “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” – சீனா
Monday, May 16th, 2016
சீன ராணுவம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு மையமான பென்டகன் அறிக்கை “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” என்று சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ‘2016–ம் ஆண்டுக்கான சீனாவின் ராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகனில், கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ உதவி அமைச்சர் ஆபிரகாம் டென்மார்க் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘‘இந்திய எல்லையின் அருகே சீனா படைக்குவிப்பை அதிகரித்து வருகிறது. இது குறித்து எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதன் உண்மையான நோக்கம் என்ன என்று முடிவுக்கு வந்து கூறுவது கடினமான ஒன்று’’ என்றார்.
அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய பயணம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், ‘‘அது நல்ல பலனை அளித்துள்ளது. இந்தியாவுடன் எங்கள் இரு தரப்பு உறவை மேம்படுத்தப்போகிறோம். சீனாவை முன்னிட்டு அல்ல. இந்தியா ஒரு முக்கியமான நாடு என்பதின் அடிப்படையில்தான்.
இந்தியா மீதான மதிப்பீட்டை புரிந்துகொண்டவர்களாக அந்த நாட்டுடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்’’ என பதில் அளித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது தளங்களில், அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் சீனா படைகளை குவித்துள்ளதாக கூறி, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள ‘2016–ம் ஆண்டுக்கான சீனாவின் ராணுவம், பாதுகாப்பு வளர்ச்சி அறிக்கை’யில்
சீனா தென்சீன கடலில் உருவாக்கி உள்ள சர்ச்சைக்குரிய செயற்கை தீவில் இவ்வாண்டு கணிசமான ராணுவ உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை பலப்படுத்த திட்டமிட்டு உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பென்டகனின் அறிக்கைக்கு சீனா தன்னுடைய வலிமையான அதிருப்தியை தெரிவித்து உள்ளது. பென்டகன் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளது. பென்டகன் அறிக்கை “பரஸ்பர நம்பிக்கையை சேதப்படுத்திவிட்டது” என்று சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related posts:
|
|
|


