முன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேசும் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஈரான் நிராகரிப்பு!

Thursday, August 2nd, 2018

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் மூண்டு உள்ளது. அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது 2015-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரில் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி அமலுக்கு வந்தது.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கைவிடவும், அதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை படிப்படியாக திரும்பப்பெறவும் அந்த ஒப்பந்தம் வழி செய்தது.

ஆனால் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என்று கூறி, கடந்த மே மாதம் அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. அதுமட்டுமின்றி ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் அமெரிக்கா மீது ஈரான் வழக்கு தொடுத்து உள்ளது. இதற்கு மத்தியில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரம எதிரியாக திகழ்ந்த வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத கைவிடலுக்கு ஆதரவாக இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சந்திப்பால், இரு தரப்பும் நிலவிவந்த போர் மேகங்கள் விலகி உள்ளன. இதே போன்று இப்போது ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியையும் சந்தித்து பேசத்தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்து உலக அரங்கை அதிர வைத்து உள்ளார்.

முன் நிபந்தனைகள் எதுவும் இல்லை. அவர்கள் சந்திக்க விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். இது நாட்டுக்கு நல்லது, அவர்களுக்கு நல்லது. உலகத்துக்கு நல்லது. எந்த முன் நிபந்தனைகளும் கிடையாது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “ஈரானில் உள்ள மிருகத்தனமான அரசு, அணு ஆயுதங்களை ஒரு போதும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது என்று நானும் இத்தாலி பிரதமரும் ஒப்புக்கொண்டோம். ஈரான் தனது தவறான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் செயலும், சொல்லும் ஒன்றுக்கொன்று முரணானது என்று ஈரானின் மூத்த ராணுவ அதிகாரிகள் நிராகரித்தனர்.   அதிபர் ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹமித் அபுவுட்டாலெபி கூறுகையில், “ஈரான் நாட்டின் உரிமைகளை மதித்து, பகைமையை குறைத்துக்கொண்டு, மீண்டும் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வழிநடத்தும்” என குறிப்பிட்டார். அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, “எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நசுக்குவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் புதிய பிரச்சாரங்களுக்கு ஈரான் வழிவகுக்காது” என்றார்.

Related posts: