முன்னாள் ஜனாதிபதி டுபாய் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, March 19th, 2019

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக டுபாயில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ‘அமைலாடோசிஸ்’ என்ற அபூர்வ நோய் இருப்பதாக டொக்டர்கள் கூறினர். மருத்துவ சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

டுபாயில் உள்ள தனது வீட்டில் மு‌‌ஷரப் ஓய்வு எடுத்து வந்தார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது அவருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது அவருக்கு டொக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டொக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.

Related posts: