மீண்டும் தாக்குதலுக்கு தயாராகவே உள்ளோம் – எச்சரிக்கும் டிரம்ப்!

Monday, April 16th, 2018

இரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார்

சிரியா அரசு இராணுவ தளங்களில் ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் நடத்தின. கடந்த சனிக்கிழமை சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை இவ்வாறாக எச்சரித்துள்ளார்.

முன்னதாக சிரியா மீதான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் கூறி இருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

கூட்டுப் படையினர் சிரியாவில் அரசுக்கு சொந்தமான மூன்று இடங்கள் மீது சனிக்கிழமை குண்டு வீசினர். இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும், இருப்புவைக்கப்படும் இடங்கள் என்று அவற்றை இந்த நாடுகள் குறிப்பிட்டன.

கடந்த வாரம் டூமா நகரில் சிரியாவின் அரசுப் படைகள் நடத்தியதாகச் சொல்லப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலை மிகவும் கடுமையான முறையில் கண்டிப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார். சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, அந்த நாட்டில் உள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் ராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.

காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக தமது நியாய உரிமை உள்ள வலிமையை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை செயல்படுத்திக் காட்டியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts: