மாயமான எம்.எச் 370 விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததாக சந்தேகம்!
Friday, November 4th, 2016
மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானம், எரிபொருள் தீர்ந்ததால் வெகுவேகமாகக் கீழே இறங்க நேர்ந்திருக்கலாம் என மேலும் சில ஆதாரங்கள் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வெளியிட்ட புதிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
விமானத்தின் இறக்கைப் பகுதியின் சிதைவு, அந்த விமானம் தரையிறங்கத் தயார் நிலையில் இல்லை என்பதைக் காட்டுவதாக அறிக்கை கூறியது. இதனால் அந்த விமானத்தை வேண்டும் என்று யாரும் கீழே செலுத்தி இருக்க வாய்ப்பு இல்லை என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்விலே இந்த விபரம் தெரியவந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான எம்.எச் 370 விமானத்தினது என்று நம்பப்படும் இதுவரை கிடைக்கப்பெற்ற 20க்கும் அதிகமான சிதைவுகள் இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போகுமுன்னர் பதிவான செயற்கைக்கோள் தொடர்புத் தகவல்கள், விமானம் வெகுவேகமாகக் கீழே இறங்க நேர்ந்ததைக் காட்டியதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.
2014 மார்ச் மாதத்தில் குவாலாலம்பூரில் இருந்து பீஜிங்கை நோக்கி 239 பேருடன் பயணித்த விமானமே நடுவானில் மாயமானது. விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
|
|