மாணவர் விடுதியில் தீ – 17 மாணவிகள் பரிதாப பலி!
Monday, May 23rd, 2016
தாய்லாந்தில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப்பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள வியாங் பா பாவ் மாவட்டத்திலுள்ள பிதாகியட்ர் வித்யா என்ற பாடசாலை விடுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் பழங்குடியினத்தை சேர்ந்த 6 முதல் 13 வயது வரையிலான மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர்.
அந்தப் பாடசாலை வளாகத்தில் மாணவிகளுக்கான தங்குமிட விடுதி அமைந்துள்ளது.
அந்த விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது விழித்திருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் தப்பித்துக் கொண்டனர். நித்திரையில் இருந்த மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப் பலியாகியுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 2 மாணவிகளை காணவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீட்பு பணிகள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது


Related posts:
|
|
|


