மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கிய 2 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு – மற்றையவரை தேடும் பணி முன்னெடுப்பு!

Monday, December 13th, 2021

மன்னார் – கோந்தைப்பிட்டி கடலில் காணாமல் போன இருவரில் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போயுள்ள மற்றையவரின் சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று (12) படகொன்றில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் – பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

அந்நபர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட மற்றுமொருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. படகில் இருந்த ஒருவர் மாத்திரம் பிரதேச மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காணாமல் போன யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவரை கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts: