போரினால் கால்களை இழந்து தவிக்கும் காஸா குழந்தைகள் – வெளியானது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!

Wednesday, June 26th, 2024

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த போரில் 37,658 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலினால் காஸா நகரம் உருக்குலைந்து போய்விட்ட நிலையில், தற்சமயம் ரஃபா நகரத்தின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல்.

போர் தாக்குதல்களுக்கு பயந்து அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அந்த இடங்களையும் விட்டு வைக்காத இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது.

காஸாவின் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதால் ரஃபா நகர தாக்குதல்களில் இலக்கானவர்களுக்கு உரிய சிகிச்சையோ அல்லது நிவாரணப் பொருட்களோ கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் இஸ்ரேலின் தாக்குதலினால் 101 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறிருக்க, ஐ.நாவின் பலஸ்தீன நிவாரணப் பிரிவான UNRWA தலைவர், பிலிப் லசாரினி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் அடிப்படையில், காஸாவில் தினமும் 10 குழந்தைகள் அவர்களது ஒன்று அல்லது இரண்டு கால்களை இழக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இதுவரையில் சுமார் 2000 குழந்தைகள் அவர்களின் கால்களை இழந்துள்ளனர். இவ்வாறு போரில் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்துவதற்கு கூட போதுமான வசதிகள் இல்லை என பிலிப் லசாரினி தெரிவித்துள்ளார்.

மேலும் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: