பெரும் பொருளாதார சரிவு – ஆடம்பர இறக்குமதிகள் – சேவைகளின் மீது வரியை உயர்த்த பாகிஸ்தான் நாடாளுமன்றம் அனுமதி!

Saturday, February 25th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் அடுத்த தவணையை பெறும் முயற்சியில், ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் சேவைகளின் மீது வரியை உயர்த்துவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

மிகவும் குறைந்த அளவான அந்தியச் செலாவணி கையிருப்பில் உள்ளமையினால் அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே பெரும்பாலான இறக்குமதிகளை நிறுத்தியுள்ளது.

உணவு மற்றும் மருந்துகள் தவிர்ந்த விடயங்களுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும் என பாகிஸ்தான் எண்ணுகிறது.

பல ஆண்டுகளாக இடம்பெற்ற நிதிமுறைகேடு மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை என்பன பாகிஸ்தானை பொருளாதார சரிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன.

இந்தநிலையில் மகிழுந்துகள், வீட்டு பாவனை பொருட்கள், இனிப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான வரியை 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிப்பதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.

அத்துடன் வணிக வகுப்பு விமான பயணச்சீட்டுகள், திருமண மண்டபங்கள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்டவற்றுக்காக மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொது விற்பனை வரி 17 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்து வரும் சில நாட்கள் மேலதிக சிக்கன நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: