பிரான்ஸ் பாதிரியார் ஏன் கொல்லப்பட்டார்?

Sunday, July 31st, 2016

பிரான்ஸ் நாட்டில் பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பிறகு தீவிரவாதிகள் தாக்குதலுக்கான விளக்கத்தை தேவாலயத்தில் இருந்த செவிலியர்களிடம் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோர்மண்டேவில் உள்ள தேவாலயத்தில் கடந்த 26ஆம் திகதி தொழுகை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, 19 வயதான இரண்டு ஜிகாதிகள் உள்ளே நுழைந்து அனைவரையும் சிறை பிடித்தனர்.

பின்னர், தேவாலயத்தில் இருந்த Jacques Hamel என்ற பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.கொலை சம்பவத்தை நிகழ்த்தியதற்கு பிறகு, அங்கிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் அவர்கள் பேசியுள்ளனர்.தீவிரவாதிகளில் ஒருவன் ‘உங்களுக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் பற்றி தெரியுமா?’ எனக்கேள்வி எழுப்பியுள்ளான்.

அப்போது ‘பைப்பிள் மீது மரியாதை வைத்திருப்பது போல குரான் மீதும் மரியாதை வைத்துள்ளேன். குரானில் சில அத்தியாயங்களை படித்துள்ளேன். அவை அமைதியை மட்டுமே போதிக்கின்றன’ என கன்னியாஸ்திரி ஒருவர் பதிலளித்துள்ளார்.

’அமைதி….? ஆமாம், நாங்களும் அமைதியை தான் விரும்புகிறோம். ஆனால் சிரியா மீது குண்டுகள் விழுவது நிறுத்தும் வரை எங்களது தாக்குதலும் தொடரும். பாதிரியார் கொல்லப்பட்டதும் அதனால் தான்.நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்களோ, அப்போது தான் நாங்களும் நிறுத்துவோம்.’ என தீவிரவாதி ஒருவன் கூறியுள்ளான்.

பின்னர், ‘நீங்கள் சாவதற்கு அச்சப்படுகிறீர்களா?’ என தீவிரவாதி ஒருவன் கேட்டுள்ளான்.‘இல்லை. ஏனெனில் எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்’ என கன்னியாஸ்திரி பதிலளித்துள்ளார்.

’தவறு. நீங்கள் வணங்கும் ஏசுநாதர் கடவுளாகவும் இருக்க முடியாது, மனிதனாகவும் இருக்க முடியாது’ என தீவிரவாதி ஒருவன் ஆத்திரத்துடன் குரலை உயர்த்தி பேசியுள்ளான்.இந்நிலையில், பதிலளித்த அந்த கன்னியாஸ்திரி தன்னை அவன் கொல்லப்போகிறான் என மனதுக்குள் எண்ணியவாறு கடவுளை பிரார்த்தனை செய்ததாக இரு கன்னியாஸ்திரிகள் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பாதிரியார் கொல்லப்பட்டதற்கு பின்னர் தேவாலயத்திற்குள் நுழைந்த பொலிசார் இரண்டு தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: