பாடசாலையில் துப்பாக்கி சூடு – குறைந்தது 17 பேர் பலி!
Friday, February 16th, 2018
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலையில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை நடத்திய சந்தேக நபரான நிகொலஸ் கிரூஸ், இந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதோடு அவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டவராவார். இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் ஆரம்பமானதை அடுத்து மாணவர்கள் ஓடி ஒளிய ஆரம்பித்ததோடு பொலிஸார் பாடசாலை கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.
2012 ஆம் ஆண்டு கன்னக்டிகட் பாடசாலையில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது. எனினும் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறும் ஆறாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது. இந்த சம்பவங்களில் மாணவர்கள் கொல்லப்பட்டு அல்லது காயமுற்றுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல்தாரி பாடசாலைக்கு வெளியில் மூன்று பேரை கொன்றிருப்பதோடு, பின்னர் கட்டடத்திற்குள் புகுந்து மேலும் 12 பேரை கொன்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|
|


