தேனி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

Monday, March 19th, 2018

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ்குமார் மரணமடைந்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் திகதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டதுடன் பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில்இ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் .

இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: