தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர்  குடியேற்றம்!

Saturday, September 22nd, 2018

மியான்மருக்கு ஒட்டியுள்ள பங்களாதேஷ் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர்.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006ம் ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது.

தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா எதிர்வரும் 3ம் திகதி திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் இங்கு குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிய வருகின்றது.

“முதல்கட்டமாக, அடுத்த மாதம் 50 முதல் 60 ரோஹிங்கியா குடும்பங்கள் இங்கு குடியேற்றப்படுவார்கள்” எனக் கூறியிருக்கிறார் பேரிடர் மேலாண்மை அதிகாரியான ஹபிபுல் கபிர் சவுத்ரி.

கடல் மட்ட அதிகரிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் பங்களாதேஷ், கடுமையான புயல்களையும் மோசமான வானிலைகளையும் எதிர்கொள்கின்றது.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பாஷன் சர் தீவை சுற்றியுள்ள கடலோர பகுதியிலேயே இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியன்மாரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.

இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், இப்படியொரு திட்டத்தை பங்களாதேஷ் முன்வைத்த போது மனித உரிமை அமைப்புகள் கடுமையான எதிர்ப்பினை பதிவுச்செய்திருந்தன.

அதையும் மீறி, இத்தீவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த தீவாக மாற்ற தீவிரம் காட்டிய பங்களாதேஷ், அதற்காக 280 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருந்தது

Related posts: