தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!

Friday, August 12th, 2022

தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

அவர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியானதையடுத்து சீனா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் சீனாவின் எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வனுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தாய்வான் எல்லையில் திடீரென்று தீவிர போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டது.

அதிநவீன ஏவுகணைகளை ஏவி கடும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை முடியும் என சீனா அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னரும் ஒத்திகையை நீட்டித்து வந்தது.

பதிலுக்கு தாய்வானும் பீரங்கி பயிற்சியை முன்னெடுத்தது. மட்டுமின்றி, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாவும் தாய்வான் ராணுவம் பதிலடி அளித்திருந்தது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணுவ பயிற்சிகளை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாய்வான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பு மூலம் கடந்த ஒருவாரமாக நீடித்த போர் பதற்றம் முடிவுக்கு வந்திருக்கிறது.

மட்டுமின்றி, கடந்த சனிக்கிழமையே தாய்வான் வணிகக் கப்பல்களை அனுமதிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாய்வான் எல்லையில் போர் ஒத்திகையை முடித்துக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளதுடன், வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: