சதாம் ஹூசைன் மட்டுமே தகுதியானவர்!
Sunday, December 18th, 2016
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனே அந்நாட்டை ஆட்சி செய்ய தகுதியான நபர் என அவரை கைது செய்த வேளையில் விசாரணை நடத்திய அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஜோன் நிக்சன் என்ற இந்த அதிகாரி ஈராக் போர் சம்பந்தமாக எழுதிய நூலில் இதனை தெரிவித்துள்ளார்.2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க கூட்டு படைகள் சதாம் ஹூசைனை கைது செய்ததுடன் ஜோன் நிக்சன் அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தார்.
ஈராக் நாட்டை அமெரிக்கர்கள் எண்ணுவது போல் இலகுவில் ஆட்சி செய்ய முடியாது எனவும் அவர்கள் அதில் தோல்வியடைவார்கள் எனவும் சதாம் கூறியுள்ளார்.
சதாம் இதனை கூறிய போது தான் அதனை நம்பவில்லை எனக் கூறியுள்ள புலனாய்வு அதிகாரி, எப்படி இதனை கூறுகிறீர்கள் என அவரிடம் வினவியதாகவும் கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்த சதாம், மேற்குலக நாடுகள் அரபு மொழியை மாத்திரமல்ல, அவர்களின் வரலாறு மற்றும் அரபு மக்களின் மனதை புரிந்து கொள்ளவும் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சதாம் ஹூசைன் கடும் போக்கான ஆட்சியாளராக இருந்த போதிலும் அவர் ஈராக்கில் வாழும் பல்வேறு இனங்களையும் பழங்குடி மக்களை இணைத்து வைப்பதில் வெற்றி கண்டிருந்ததாகவும் சீ.ஐ.ஏ. அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.ஜோன் நிக்சன் என்ற இந்த புலனாய்வு அதிகாரி தற்போது சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


