கொரோனா பரவல் : 19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கின்றது அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள முன்னணி விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறி வருகின்றது.
இதை சமாளிக்க அரசு சார்பில் 25 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியும் காலியானதால், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் எனவும், இல்லை எனின் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|