கொரோனா தொற்றால் அலறும் அமெரிக்கா: முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்கிறார் ஜனாதிபதி ட்ரம்ப்!
Tuesday, April 14th, 2020அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளதோடு 5 இலட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க மருத்துவதுறைசார் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 1500 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகளவான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை கடந்து தற்போது அமெரிக்காவில் நிலைகொண்டுள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது.
அத்துடன் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமெரிக்காவில் நாடுமுழுவதும் உள்ள அவசரகால நிலைமையை மீள பெறுவதற்கான அதிகாரங்கள் ஆளுநர்களுக்கு உள்ளது என்ற தவறான கருத்தொன்று ஊடகங்களில் பரவி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தின் ஊடாகவே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவின் அனைத்து மாநிலங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|