கியூப தேசத்தின் தலைவர் காஸ்ட்ரோவுக்கு சிலை வைக்க கியூபாவில் தடை!
Thursday, December 29th, 2016
காலஞ்சென்ற கியூப தேசத்தின் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவுக்கு சிலை அமைப்பது மற்றும் பொது இடங்களுக்கு அவரது பெயரை வைப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்று கியூப பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிடெல் காஸ்ட்ரோவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
தம்மை வழிபடுவதை எதிர்த்து வந்த காஸ்ட்ரோ தமது பெயரை பயன்படுத்துவதையும் விமர்சித்து வந்தார். பிடெல் காஸ்ட்ரோவை நினைவுபடுத்துவதற்கான சிறந்த வழி அவரது புரட்சி கொள்கையை பின்பற்றுவதாகும் என்று ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
எனினும் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில் கலைஞர்கள் தமது படைப்புகளில் காஸ்ட்ரோவின் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், கல்வி அல்லது பொது நிறுவனங்களில் அவரது படத்தை தொங்கவிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பனிப்போர் காலத்தின் முக்கிய தலைவராக இருந்த பிடெல் காஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தனது 90ஆவது வயது மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு கியூபாவில் ஒன்பது நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு இரு ஞாபகார்த்த நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Related posts:
|
|