கடும் மழை எதிரொலி: சென்னை வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன!
Sunday, September 18th, 2016
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் பலத்த மழை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் 15–க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கமும் தாமதமானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
மலேசியாவில் இருந்து 207 பயணிகளுடன் ஒரு விமானம் இரவில் சென்னை வந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து 189 பயணிகளுடன் வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கே திருப்பிவிடப்பட்டது.
இதைப்போல டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், புனே, கோவை, பாங்காக், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமிட்டன. நள்ளிரவு 2 மணிக்கு பின்னர் அவை ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. இந்த கன மழையால் சென்னையில் 15–க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட அந்த 2 விமானங்களும் நேற்று அதிகாலையில் சென்னைக்கு திரும்பின. இதில் மலேசியாவில் இருந்து வந்த விமானத்தின் விமானி ஓய்வுக்கு சென்றுவிட்டதால் அந்த விமானம் மாலையில்தான் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 260 பயணிகளும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
Related posts:
|
|