கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது – இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023

உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என்று இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் பிணையெடுப்பு கோரியுள்ளன. இந்த நிலையில், அவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், பல நாடுகளில் அதிகரித்து வரும் கடன் பாதிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜி-20 நாடுகளின் பலதரப்பு ஒருங்கிணைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோர் பெங்களூரில் நேற்று நடத்திய கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் நிதிக் கூட்டத்தின் ஒரு கட்டமாக கடன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமெரிக்காவும் சீனாவும் தங்கள் நிதி அதிகாரிகளுக்கு இடையே துணை நிலை பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், கடன் உட்பட பலதரப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் நேற்று தெரிவித்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில், அமெரிக்க திறைசேரியின் பேச்சாளர் மற்றும் சீனாவின் நிதி அமைச்சு, அதன் மத்திய வங்கியின் அதிகாரிகள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: