இஸ்ரேலில் கூடும் உலகத் தலைவர்கள்!
Friday, September 30th, 2016இஸ்ரேலின் மூத்த அரசியல் தலைவரும், இரு முறை பிரதமராகவும், ஒரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த ஷீமோன் பெரெஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, உலகத் தலைவர்கள் இஸ்ரேலில் கூடத் தொடங்கியுள்ளனர்.
தனது 93-வது வயதில், புதன்கிழமையன்று காலமான ஷீமோன் பெரெஸ் உடல், ஜெருசலேத்தில் உள்ள தேசிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தற்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அவரது உடல் இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
பெரெஸின் இறுதி ஊர்வலம் துவங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கையாக பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் வரும் உலகத் தலைவர்களில் பாலத்தீன தலைவர் மஹமூத் அப்பாஸும் ஒருவர். இவர், கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இஸ்ரேலுக்குப் பயணம் செய்கிறார். அப்பாஸின் விருப்பத்தின்பேரில் இந்தப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தீன விடுதலை இயக்கத்தின் (பிஎல்ஓ) சார்பில், 1993-ம் ஆண்டு ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். அதற்காகத்தான் 1994-ம் ஆண்டு ஷீமோன் பெரெஸ், யாசர் அராஃபத் மற்றும் யிட்சக் ராபின் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
பாலத்தீனர்கள் என்றும் அமைதியை விரும்புபவர்கள் என்றும் ஷீமோன் பெரெஸ் போன்றவர்களின் முயற்சிகளைப் பாராட்டும் வகையிலும் இஸ்ரேல் சமூகத்துக்கு அழுத்தமான தகவலை அனுப்புவதற்காகத்தான் அப்பாஸ் இந்தப் பயணத்தை மேற்கோள்வதாக, மூத்த பாலத்தீன அதிகாரி ஒருவர் அசோசியேடட் பிரஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் காசாவை அதிகாரத்தில் வைத்திருக்கும் கடும்போக்கு பாலத்தீன இயக்கமான ஹமாஸ் பேச்சாளர் அப்பாஸை தொடர்பு கொண்டு, `கிரிமினல் ஷீமோன் பெரெஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு, தென் லெபனானில் ஐ.நா. வளாகத்தில் தங்கியிருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில், 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பிராந்தியத்தில் பெரெஸ் மீதான நல்லெண்ணத்துக்கு களங்கம் ஏற்படுத்தியது.
ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த அந்த நேரத்தில் உத்தரவிட்டது, பிரதமராக இருந்த ஷீமோன் பெரெஸ்தான். இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளின் பிரதிநிதிகளும் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
Related posts:
|
|