இந்தியா – பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் – அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் தகவல்!

Friday, March 10th, 2023

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் போர் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் இராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வன்முறை பரவி அமைதியற்ற சூழல் நிலவுகின்றமை மற்றும் இரு தரப்பிலும் அதிகரித்து வரும் பதற்றங்களால் நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் சீனாவுடனான எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது.

எனினும், எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலே காணப்படுகின்றது.

அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்துள்ளது.

இதனால், அமெரிக்காவின் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியமும் உள்ளது.

அமெரிக்காவை தலையிட அழைக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு வருங்காலங்களில் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: