அரச விருந்தினராக இந்தியா  சென்றடைந்த றோயல் தம்பதிகள்

Sunday, April 10th, 2016
இன்று மும்பையைச் சென்றடைந்துள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் தம்பதியினருக்கு  பலத்த பாதுகாப்புடன் வரவேற்பு வழங்கப்பட்டள்ளது..
ஏப்ரல் 10 முதல் 17ஆம் திகதி வரை அரசு விருந்தினராக தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் உள்பட நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கவுள்ளனர்.
இன்று பகல் சுமார் 12 மணியளவில் மும்பை நகரை சென்றடைந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் இங்குள்ள தாஜ் ஹோட்டலில் தங்குகின்றனர். அவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை டப்பாவாலாக்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பாலிவுட் பிரபலங்கள் சார்பில் அளிக்கப்படும் வரவேற்பு விழாவில் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், ரிச்ஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவின்போது தனது நடிப்பில் சமீபத்தில் வெளியாகவுள்ள ‘ஃபேன்’ திரைப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்க தேவையான ஏற்பாடுகளை ஷாருக் கான் செய்து வருகிறார். வில்லியம்-கேத் தம்பதியர் இந்தப் படத்தை பார்ப்பார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், மும்பையில் பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மதிய உணவுகளை எடுத்துச் செல்லும் ‘டப்பா வாலா’க்களும் வில்லியம்-கேத் தம்பதியருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்த ஏற்பாடு செய்து வருகின்றனர். டயானாவின் மறைவுக்கு பின்னர் கமிலா பார்க்கட் என்பவரை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த 2005-ம் ஆண்டு இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு வருமாறு மும்பையில் வாழும் மிகவும் தாழ்ந்தப் பிரிவு உழைக்கும் வர்க்கத்தினரான ‘டப்பாவாலாக்கள்’ சங்கத்தைச் சேர்ந்த இரு பிரதிநிதிகளுக்கு பிர்ட்டிஷ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையேற்று, அந்த திருமணத்துக்கு சென்ற அவர்களுக்கு லண்டன் நகரில் தடபுடலான விருந்தும், தேவையான வசதிகளுடன் செய்து தரப்பட்டன. பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தினர் தங்களுக்கு அளித்த விருந்தோம்பல் மற்றும் உபசரிப்புக்கு தங்களது நன்றிக்கடனை திருப்பி செலுத்த முடிவு செய்துள்ள மும்பை ‘டப்பாவாலாக்கள்’ வில்லியம்-கேத் தம்பதியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானித்துள்ளனர்.
அவர்களுக்கு நினைவுப்பரிசும் அளிக்க ’டப்பாவாலாக்கள்’ விருப்பம் தெரிவித்து இதற்காக மும்பையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். நாளைக்குள் அனுமதி கிடைக்காவிட்டால், பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் மூலமாக வில்லியம்-கேத் தம்பதியருக்கு தங்களது நினைவுப்பரிசை அனுப்பிவைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related posts: