அமெரிக்க அதிகாரியிடம் “இது எங்களுடைய நாடு” என சீன அதிகாரி கூறியதால் பெரும் பரபரப்பு!
Sunday, September 4th, 2016
‘ஜி–20’ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தில் இருந்து தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சலிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சினாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று(03) மாலை ‘ஜி–20’ என்னும் 20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் கலந்துக் கொள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் சென்று உள்ளார். ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சீனா பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கும் விதிவிலக்கு கிடையாது என்றாகிவிட்டது.
பொதுவாக அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களுக்கு வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களை அழைத்து செல்வது வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகிறது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர்போர்ஸ் ஒன் விமானத்தின் அருகில் சென்று செய்தி சேகரிக்கவும், பார்வையிடவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சீனாவில் அமெரிக்க செய்தியாளர்கள், வந்திறங்கிய ஒபாமாவுக்கு அருகில் செல்லமுயன்ற போது அதனை சீன பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர். அப்போது அமெரிக்க செய்தியாளர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தனர், ஆனால் சீன பாதுகாப்பு அதிகாரிகள் செல்ல அனுமதிக்கவில்லை, தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து வெள்ளை மாளிகை பெண் அதிகாரி சீன பாதுகாப்பு அதிகாரியிடம் இது அமெரிக்க விமானம், அவர் அமெரிக்க அதிபர் என்று கூறிஉள்ளார். இதனையடுத்து இது சீனா, எங்கள் நாடு, எங்கள் விமான நிலையம் என்று அந்த அதிகாரி கடுமையாக பேசி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் சுசென் ரைஸ் மற்றும் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி பென் ரோடஸ் அதிபர் ஒமாவை நெருங்க முயன்றபோது சீன அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Related posts:
|
|