அமெரிக்க அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 1st, 2017

ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவில் சுமார் 1000க்கும் அதிகமான அமெரிக்க தூதரக அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.  அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவும் சூழ்நிலையில், தற்போது இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே மோதலை உருவாகியுள்ளது.  அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டுகூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது இராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி, அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  அதன்படி, மேற்கண்ட நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ட்ரம்ப்பின் கையெழுத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளில் 755 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts: