அமெரிக்கா நாடகமாடுகிறது’ – ஈரான் குற்றச்சாட்டு!
Wednesday, June 26th, 2019‘சமாதானத்துக்கான கதவுகள் திறந்திருப்பதாக கூறி அமெரிக்கா நாடகமாடுகிறது’ என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கமானி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரானுடன் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சமாதான கதவுகளை திறந்தே வைத்திருக்கிறோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கமானி அமெரிக்கா பொய் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் அலி கமானியின் அலுவலகத்தின் மீதும் அமெரிக்கா புதிய பொருளாதார தடையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக, மேலதிக பொருளாதார தடை விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் ஈரான் அரசின் செயற்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பானவர் என்ற அடிப்படையிலேயே அயோத்துல்லா கமானிக்கு எதிரான பொருளாதார தடை விதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாட் சாரிஃப் ‘அற்பமான இராஜதந்திரம்’என விமர்சித்துள்ளார். கடந்த வாரங்களில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்ட நிலைமை தீவிரமடைந்து வருகிறது.
இரண்டு நாடுகளும் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
Related posts:
|
|