அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – விளாடிமிர் புதின்!

Thursday, January 3rd, 2019

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா ரஷ்யா இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது” என புதின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கான முக்கிய காரணி என புதின் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

அதே போல் சிரிய ஜனாதிபதி பாஷர் அல் ஆசாதுக்கு புதின் எழுதியுள்ள கடிதத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கவும், இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் சிரிய அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் ரஷ்யா தொடர்ந்து செய்யும் என உறுதியளித்து உள்ளார்.

Related posts: