அண்டை நாடுகளின் நிபந்தனைகளை நிராகரித்தது கட்டார்!

Monday, June 26th, 2017

சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் தம் மீது விதித்துள்ள நிபந்தனைகள், நடைமுறை ரீதியாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லாதவை என்று கட்டார் நிராகரித்துள்ளது.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளும் நியாமானதோ, நிறைவேற்ற சாத்தியமானதோ அல்ல என்று கூறி கட்டார் வெளியுறவு அமைச்சர் அவற்றை நிராகரித்திருக்கிறார்.

சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகியவை கட்டார் மீது கடுமையான தடைகளை விதித்துள்ளன. பயங்கரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளித்து வருவதாக அவை குற்றஞ்சாட்டி வருக்கின்றன.

பிற நிபந்தனைகளோடு, கட்டார் அரசால் நிதி ஆதரவு வழங்கப்படும் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடிவிட வேண்டுமென இந்த நாடுகள் நிபந்தனை வைத்துள்ளன.இந்த நாடுகள் “கருத்து சுதந்திரத்தை தடுக்க” முயல்வதாக அல் ஜசீரா தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு மேலாக முன்னேப்போதும் இல்லாத வகையில், கட்டார் மீது ராஜீய மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால், ஈரானும், துருக்கியும் கட்டாருக்கு அதிக அளவிலான உணவு மற்றும் பிற பொருட்கனை வழங்கி வருகின்றன.

பயங்கரவாதத்திற்கு நிதி ஆதரவு அளிப்பது மற்றும் பிராந்திய ஸ்திரமின்மையை ஏற்படுத்துவது போன்ற தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கட்டார் மறுத்துள்ளது.ஈரானோடு தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும், துருக்கியின் ஒரு இராணுவ தளத்தை கட்டார் மூடிவிட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கும் இந்த நான்கு நாடுகளும், இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற 10 நாட்கள் காலக்கெடு வழங்கியுள்ளன.

கட்டார் அரசின் பதில் – இந்த நிபந்தனைகைளை அரசு மீளாய்வு செய்து வருகிறது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கட்டார் மீது தடை விதித்துள்ள நான்கு நாடுகளும் “நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய” கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் புதன்கிழமை கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க வெளியுறவு செயலர் இந்த தடைகளை ஏற்படுத்தியுள்ள நாடுகளிடம் நியாயமான, நடைமுறைப்படுத்தக்கூடிய நிபந்தனைகள் அடங்குகிற பட்டியலை உருவாக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார்” என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான அல்-தானியை மேற்கோள்காட்டி அல் ஜசீரா தெரிவித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகள் மிதமானவையாக, நிறைவேற்றத் தக்கவையாக இருக்க வேண்டுமென பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இவர்களின் வரையறைகளுக்கு ஒத்ததாக இந்த நிபந்தனை பட்டியல் அமையவில்லை” என்று அல்-தானி கூறியுள்ளார்.

கட்டார் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதோடு தொடர்புடையதல்ல என்பதற்கு இந்த நிபந்தனை பட்டியலே சான்று” என்று கூறியிருக்கும் அல்-தானி, “இவை கட்டாரின் இறையாண்மையை கட்டுப்படுத்தி எமது வெளிநாட்டுக் கொள்கையை அடுத்தவர் முடிவு செய்வதாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு அரசிடம் அல்லது நிர்வாகத்திடம் இருந்தும் வரும் அழுத்தங்களுக்கு தலை வணங்காமல், எமது ஊடகவியல் நடவடிக்கைகளை தொழில்முறையோடு பின்பற்றும் உரிமையை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: