IPL கிண்ணத்தை வென்றது ஐதராபாத்!
Monday, May 30th, 2016பெங்களூர் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும் அதனை தகத்தெறிந்த ஹைதரபாத் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தை வென்றது.
9ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக டிரென்ட் போல்ட் நீக்கப்பட்டு, காயத்தில் இருந்து குணமடைந்த முஸ்தாபிஜூர் ரகுமான் அணிக்கு திரும்பினார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதரபாத் அணித் தலைவர் வோர்னர் தைரியமாக முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். இதன்படி டேவிட் வோர்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர்.
ஓரிரு ஓவர் நிதானத்துக்கு பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர். தவான், 6 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த போது அவரது பிடியெடுப்பை கெயில் தவறவிட்டார். இதனை சாதகமாக பயன்படுத்திகொண்டு தவான் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.
மறுமுனையில் வோர்னர் வழக்கம் போல் சரமாரியாக துடுப்பெடுத்தாடினார். சிறிய மைதானம் மாத்திரமன்றி, ஆடுகளம் முழுமையாக துடுப்பாட்டத்துக்கு சாதகமாக தென்பட்டதால் பந்து வீச்சாளர்களால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை பெற்றிருந்த போது (6.4 ஓவர்) தவான் 28 ஓட்டங்களுடன் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 4 ஓட்டங்களுடன் வெளியேறினாலும் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய யுவராஜ்சிங், தனது முதல் ஐ.பி.எல். இறுதி சுற்றில் கணிசமான பங்களிப்பை அளித்தார்.
இதற்கிடையே வார்னர் 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவரது 9-வது அரைசதம் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசிய சுரேஷ் ரெய்னாவின் (சென்னை அணிக்காக 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் 24 பந்தில் அரைசதம்) சாதனையை சமன் செய்தார்.
52 ஓட்டங்களில் இருந்த போது பிடியெடுப்பு வாய்ப்பில் இருந்து தப்பிய வோர்னர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 125 ஓட்டங்களாக உயர்த்திய போது 69 ஓட்டங்களுடன் (38 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹ_டா 3 ஓட்டங்களுடனும், யுவராஜ்சிங் 38 ஓட்டங்களுடனும் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) நாமன் ஓஜா 7 ஓட்டங்களுடனும், பிபுல் ஷர்மா 5 ஓட்டங்களுடனும் அரங்கு திரும்பினர்.
ஐதராபாத் அணி 200 ஓட்டங்களை எட்டுமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இறுதி கட்டத்தில் அவுஸ்திரேலியாவின் சகலத்துறை வீரர் பென் கட்டிங் துடுப்பாட்டத்தில் மிரட்டினார். வொட்சனின் இறுதி ஓவரில் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டியடித்து வியப்பூட்டினார். இதில் ஒரு சிக்சர் 117 மீட்டர் தூரத்துக்கு மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களை குவித்தது. இறுதி 3 ஓவர்களில் மட்டும் ஐதரபாத் துடுப்பாட்ட வீரர்கள் 52 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பென் கட்டிங் 39 ஓட்டங்களுடன் (15 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். மேலும் ஐதரபாத் சன் ரைசர்ஸ் அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 205 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. பெங்களூர் தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளும், அரவிந்த் 2 விக்கெட்டும், யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வொட்சன் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களை வழங்கினாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
அடுத்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெய்லும், விராட் கோலியும் களம் புகுந்தனர். அதிரடியை காட்டி கெய்ல் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை சந்தோசம் படுத்தினார்.
கெயில் அதிரடியாக துடுப்பெடுத்தாட அடிக்க விட்டு கோலி அதற்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ஓட்ட எண்ணிக்கை வீதம் அதிகரித்தது.
25 பந்துகளில் கெய்ல் அரைசதத்தை எட்டினார். பெங்களூர் அணி 9 ஓவர்களில் 100 ஓட்டங்களை தாண்டி பிரமாதப்படுத்தியது.
இந்த ஜோடி 114 ஓட்டங்கள் விளாசிய நிலையில் பிரிந்தது. கெய்ல் 76 ஓட்டங்களுடன் (38 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்) பென் கட்டிங்கின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் கோலி அரைசதத்தை கடந்து கோலி 54 ஓட்டங்களில் (35 பந்து, 5 பவுண்டரி 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து லோகேஷ் ராகுல் (11), ஷேன் வொட்சன் (11), ஸ்டூவர்ட் பின்னி (9) ஆகியோரும் வெளியேற சரியான பாதையில் பயணித்த பெங்களூர் அணி நெருக்கடி வளையத்தில் சிக்கியது.
ஐதராபாத் சாம்பியன்
இறுதி ஓவரில் பெங்களூ அணியின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள்; தேவைப்பட்டன. கிறிஸ் ஜோர்டான், சச்சின் பேபி களத்தில் நின்றனர். பரபரப்பான 20ஆவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் வீசினார். முதல் 3 பந்தில் 3 ஓட்டங்கள்; மட்டுமே எடுத்து ஜோர்டானின் (3 ஓட்டங்கள்) விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து 3 பந்தில் 15 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. எஞ்சிய 3 பந்தில் 6 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து புவனேஸ்வர்குமார் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது. அந்த அணிக்கு இந்திய ரூ.20 கோடி பரிசாக கிடைத்தது.
அதே நேரத்தில் பெங்களூரு அணியின் சோகம் தொடருகிறது. ஏற்கனவே 2009, 2011ஆம்ஆண்டு இறுதிப்போட்டிகளிலும் பெங்களூரு அணி தோல்லியுற்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை பென் கட்டிங் பெற்றுக்கொண்டார்.
தொடர் ஆட்டநாயகன் விருதினை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதிக விக்கட்டிற்கான விருதை ஹைதராபாத் அணியின் புவனேஸ்வரகுமார், வேகமாக பெறப்பட்ட 50 ஓட்டங்களுக்கான விருது கிரிஸ் மொரிஸ், அதிக ஆறு ஓட்டங்களுக்கான விருது விராட் கோஹ்லி, நேர்த்தியான துடுப்பாட்டத்திற்கான விருது டேவிட் வோனர், சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Related posts:
|
|