வென்றது பார்சிலோனா!

Tuesday, August 30th, 2016

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரின், இலங்கை நேற்று முடிவடைந்த போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.

அத்லெட்டிகோ பில்பாவோவுடனான போட்டியிலேயே, 1-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது. பார்சிலோனா சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 21ஆவது நிமிடத்தில், தலையால் முட்டி இவான் றாக்கிடிக் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் முதற்பாதியில், எட்டு யார் தூரத்திலிருந்து ஆர்டா தூரன் கோல் பெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்ததுடன், இரண்டு தடுப்பாட்டக்காரர்களைத் தாண்டிச் சென்ற லியனல் மெஸ்ஸி, கோல்கம்பத்துக்கு வெளியே அப்பந்தை அடித்திருந்ததுடன், மேலுமொரு கோல் பெறும் வாய்ப்பை கோல்கம்பத்துக்கு மேலால் அடித்திருந்தார். தவிர, லூயிஸ் சுவாரஸ், எட்டு யார் தூரத்திலிருந்து அடித்த பந்தும் கோல்கம்பத்துக்கு வெளியால் சென்றதுடன், மேலுமொரு வாய்ப்பை பிலாபோவின் தடுப்பாட்டக்காரர் தடுத்திருந்தார்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் தனது பரமவைரி அணியான றியல் மட்ரிட்டோடு சமநிலையாக ஆறு புள்ளிகளை பார்சிலோனா பெற்றபோதும் கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் லாஸ் பல்மாஸ் அணி தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது.

சனிக்கிழமை (27) இடம்பெற்ற போட்டிகளில், செல்டா விகோவை றியல் மட்ரிட் தோற்கடித்திருந்ததுடன், அத்லெட்டிகோ மட்ரிட், லெயானிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Related posts: