விளையாட்டு அமைச்சருக்கு எதிராக மலிங்க !

Saturday, June 24th, 2017

விளையாட்டு மந்திரியை குரங்கு என்று அழைத்த இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்  என செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.இதில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. பாகிஸ்தானை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

இதனால் இலங்கை நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, வீரர்களின் உடற்தகுதி குறித்து விமர்சன்ம் செய்திருந்தார்.இதுகுறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறுகையில், சொகுசாக இருந்து கொண்டு விமர்சனம் கூறுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. கிளியின் கூண்டு பற்றி குரங்கிற்கு என்னத்தெரியும்?. இதுபோன்ற குரங்குகள் கிளிக் கூண்டிற்குள் சென்று இதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறது என்றார்.

மலிங்காவின் இந்த கருத்து இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும், தான் கூறிய கருத்து குறித்து தயாஸ்ரீ ஜெயசேகரா கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீடியாக்களின் விதிமுறை மீறி பேசியதாக, அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வீரர்களுடைய உடற்தகுதி குறித்துதான் தாம் விமர்சனம் மேற்கொண்டதாகவும் மலிங்காவின் பெயரை தாம் குறிப்பிடவில்லை எனவும் கூறியுள்ள மந்திரி, ஆனால், அவரைத்தான் நான் கூறுவதாக நினைத்து என்னை பொது இடத்தில் மலிங்கா தாக்கி பேசியுள்ளார் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts: