விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!

Tuesday, August 3rd, 2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி அனைவரின் கவனத்தையும் பெற்றது மட்டுமல்லாது அது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் இத்தாலியின் ஜியான்மார்கோ தம்பேரி இறுதிப் போட்டியில் கட்டாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிமை எதிர்கொண்டார்.

இருவரும் 2.37 மீற்றர் உயரம் பாய்ந்து சம நிலையில் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் மேலும் 3 முயற்சிகள் கொடுக்கப்பட்டது.ஆனால் அவர்களால் 2.37 மீற்றருக்கு மேல் உயரம் பாய முடியவில்லை. இருவருக்கும் மேலும் ஒரு முயற்சி வழங்கப்பட்டது.

ஆனால் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இத்தாலியின் தம்பேரி கடைசி முயற்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில், பார்ஷிமுக்கு முன்னால் வேறு போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால் அவர் தங்கத்தை தனியாக எளிதாக வென்றிருக்க முடியும். ஆனால் கட்டாரின் பார்ஷிம் அதிகாரியிடம், “இறுதி முயற்சியிலிருந்து நானும் விலகினால் தங்கத்தை எங்கள் இருவருக்கும் பகிர முடியுமா?” என கேட்டுள்ளார்.

இதற்கு அதிகாரி ஆம், தங்கம் உங்கள் இருவருக்கும் இடையில் பகிரப்படும் என்று உறுதியளித்து கூறினார். பார்ஷிம் பின்னர் யோசிக்க ஒன்றுமில்லை, இறுதி முயற்சியிலிருந்து தானும் விலகுவதாக அறிவித்தார்.

இதைப் பார்த்த இத்தாலிய போட்டியாளர் தம்பேரி ஓடி வந்து பார்ஷிமை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்த நடவடிக்கையும் வெளிப்பாடும் விளையாட்டு இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.கடந்த 109 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தடகளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது விசேட அம்சமாகும்.

அந்தவகையில், இம்முறை உயரம் தாண்டும் போட்டியில் கட்டார் நாட்டைச் சேர்ந்த முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் மற்றும் இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாம்பியன்களாகத் தெரிவாகி தங்கப்பதக்கங்களை சுவீகரித்தனர்.

Related posts: