லங்கா பிரீமியர் லீக்: யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி அபார வெற்றி!

Saturday, November 28th, 2020

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளால் காலி கிளாடியேற்றர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, காலி அணி 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அப்ரிடி 58 ஓட்டங்களைப் பெற்றதுடன் குணதிலக 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், யாழ்ப்பாண அணி சார்பாக ஒலிவியர் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் வனின்டு ஹசரங்க இரண்டு விக்கெட்டுகளையும் திசர பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 176 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஸ்க பெர்னாண்டோ அதிரடியாக விளையாடினார்.

இந்நிலையில் யாழ்ப்பாண அணி 19.3 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

யாழ்ப்பாண அணி சார்பாக அவிஸ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 92 ஒட்டங்களைப் பெற்றதுடன் சொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மொஹம்மட் அமிர் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts: