முத்தரப்புத் தொடராகின்றது டெஸ்ட் போட்டி?

Wednesday, August 3rd, 2016

சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியன கொண்ட தொடரில் டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடராக மாறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொடர், ஒக்டோபரிலும் நவம்பரிலும் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இலங்கையும் சிம்பாப்வேயும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும் முத்தரப்புத் தொடராக மாற்றப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூலமாகக் கிடைக்கும் வருமானம், போதுமானளவில் இருக்காது என்பதால், டெஸ்ட் தொடரை விளையாடும் எண்ணத்தை, சிம்பாப்வே கொண்டிருக்கவில்லை என, இவ்விடயம் தொடர்பாக அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் கடன் நிலைவரம் காரணமாகவும் சிம்பாப்வேயில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், கடுமையான சிக்கலை சிம்பாப்வே கிரிக்கெட் சபை எதிர்கொள்கின்றது.

இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நவம்பரில், டெஸ்ட் போட்டியொன்றை விளையாடியிருந்த சிம்பாப்வே அணி, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னராக, தற்போது நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்குபற்றுகின்றது.

இலங்கை அணியும் சிம்பாப்வே அணியும், இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தன. 2 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் 2 போட்டிகளிலும் இலங்கை ஓர் இனிங்ஸாலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களாலும் வெற்றி கிடைத்திருந்ததோடு, குமார் சங்கக்கார, இரட்டைச் சதமொன்றைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: