பாகிஸ்தான் அணியை கடுமையாக குற்றஞ் சுமத்தும் சொயிப் அக்தர்!

Tuesday, June 18th, 2019

இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி வீரர்கள் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், சர்பிராஸ்கானை மூளையில்லாத கேப்டன் என்று திட்டியுள்ளார்.

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின, இது லீக் போட்டி தான் என்றாலும், போட்டியையும் தாண்டி இது ஒரு உணர்ச்சிகரமான போட்டியாக பார்க்கப்பட்டது.

இதனால் அரங்கமே நிரம்பி வழிந்தது. நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடர்களில் கடந்த சில தொடர்களில் இந்திய அணியிடம், பாகிஸ்தான் தொடர்ந்து அடி வாங்கி வந்ததால், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அணி இந்த முறையும் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டி முடிவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில், இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்றது முக்கியமான விஷயம்.

அதை வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்தது, மூளையில்லாத கேப்டன்சியைதான் காட்டியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் சேஸிங் செய்யும் போது அது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும்.

பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் செய்துள்ளது.

பந்துவீச்சும் சரியில்லை. ஹசன் அலி சரியாக வீசவில்லை. வாஹா எல்லையில் போய் சல்யூட் அடிக்கத் தெரிகிறது, (கடந்த 2018 ஆம் ஆண்டு வாஹா எல்லையில், இந்திய பாதுகாப்பு வீரர்களை அவமதிக்கும் வகையில் ஹசன் அலி நடந்துகொண்டது சர்ச்சையானது).

அதுமட்டும் போதுமா? இங்கு திறமையை காண்பிக்க வேண்டியதுதானே? முகமது ஆமீர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுக்கத்தவறிவிட்டார். மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கூறியுள்ளார்.

Related posts: