பதவி துறந்தார் டி வில்லியர்ஸ்!

Friday, August 25th, 2017

தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவராகச் செயற்பட்ட ஏபி டி வில்லியர்ஸ், அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆனால், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் என, 3 வகையான போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர், “இருபதுக்கு-20 அணிக்கும் டெஸ்ட் அணிக்கும், அதிசிறந்த அணித்தலைவராக, ஃபப் டு பிளெஸி தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இதை மனதில் வைத்துக் கொண்டு, ஒருநாள் சர்வதேசப் போட்டியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் விரும்புகிறேன் என, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

“கடந்த 6 ஆண்டுகளாக, அணியின் தலைவராகப் பணியாற்றியமை, கௌரவமாக அமைந்தது. ஆனால், அணியின் தலைமைப் பொறுப்பை, இன்னொருவர் ஏற்பதற்கான நேரம் இது. யார் அணித்தலைவராக வந்தாலும், என்னுடைய முழுமையான ஆதரவு காணப்படும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதைத் தவிர்த்து வரும் டி வில்லியர்ஸ், தான் விரும்பிய போட்டிகளைத் தெரிவுசெய்து, விரும்பியவாறு பங்குபற்றி வருகிறார் என்ற விமர்சனம் காணப்படுகிறது. ஆனால், அந்த விமர்சனத்தை, அவர் மறுத்தார்.

“அது உண்மை கிடையாது. அது, எப்போதுமே உண்மையாக இருந்ததில்லை. தென்னாபிரிக்காவுக்காக விளையாடுவது, முன்னரும் இனியும் எப்போதும், என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

உள, உடல்ரீதியான களைப்பு, இளைய குடும்பத்தைக் கொண்டு நடத்துகின்றமை ஆகியவற்றின் காரணமாக, சர்வதேசப் போட்டிகளிலிருந்து தற்காலிக ஓய்வை எடுத்ததாகத் தெரிவித்த அவர், தற்போது, புத்துணர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டால், ஓட்டங்களையும் பிடிகளையும் என்னால் உத்தரவாதமளிக்க முடியாது. யாராலும் அது முடியாது. ஆனால், ஒவ்வொரு வகையான போட்டியிலும், என்னுடைய 100 சதவீதத்தை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: