நூலிழையில் பறிபோன பதக்கக் கனவு!

Monday, August 15th, 2016

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை நழுவிப்போனது.

இறுதிப் போட்டியில், தீபா கர்மாகர் 15.066 புள்ளிகளைப் பெற்றார். 15.966 புள்ளிகளை பெற்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய வீராங்கனை மரியா 15.253 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜியுலியா, 15.216 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடைசிப் போட்டியாளராக அமெரிகக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் பங்கேற்பதற்கு முன்னதாக, தீபாதான் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற மூன்றாவது வீராங்கனையாக இருந்தார்.ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இந்தியா இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தீபா கர்மாகர் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி தான், தீபா பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் தீபா கர்மாகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: