தினேஷ் கார்த்திக்-தவான் அசத்தல்: நியூசிலாந்தை வென்றது இந்தியா!

Thursday, October 26th, 2017

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தினேஷ் கார்த்திக் , தவானின் இணையின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6 இலக்குளால் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது.நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன், முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11), முன்ரோ (10), வில்லியம்சன் (3) என சொதப்பினர்.

அதன் பின் முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய ஜோடியான ராஸ் டெய்லர் (21), லதாம் (38) ஆகியோரும் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.நிகோலஸ் (42) புவனேஸ்வர் வேகத்தில் வீழ்ந்தார். தொடர்ந்து சகால் சுழலில் கிராண்ட்ஹோமே (41), மில்னே (0) ஆகியோர் அடுத்ததடுத்த பந்தில் வெளியேறினர்.தொடர்ந்து வந்த சவுத்தி அடுத்த பந்தை தடுத்து ஆட சகாலின் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.கடைசி நேரத்தில் சாண்ட்னர் (29), சவுத்தி (25) ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் எடுத்தது.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பூம்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.231 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக, ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கினர்.

ரோகித் சர்மா(7), அணியின் தலைவர் கோஹ்லி(29) என வந்த வேகத்தில் பவுலியன் திரும்பினர். இதையடுத்து இணைந்த தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.இதனால் அணியின் ரன் விகிதம் சீரான விகிதத்தில் எகிறியது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், தவான் 68 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து ஹார்திக் பாண்ட்யா களமிறங்கினார்.பாண்ட்யா தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 68, தினேஷ் கார்த்திக் 64 ஓட்டங்கள் எடுத்தனர்.மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கிறது.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 100-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது 50வது வெற்றியை பதிவு செய்ததுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 29-ஆம் திகதி கான்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: