செல்சியைத் தவிர்க்கவே அஸ்டன் வில்லாவில்!

Thursday, July 6th, 2017

செல்சி அணியின் முன்னாள் தலைவரான ஜோன் டெரி, எதிர்காலப் போட்டிகளில், செல்சி அணிக்கெதிராக விளையாடுவதைத் தவிர்ப்பதற்காகவே, அஸ்டன் வில்லா அணியுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

22 ஆண்டுகளாக செல்சி அணியில் விளையாடியிருந்த டெரி, கடந்த பருவகாலத்துடன், அவ்வணியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே, அஸ்டன் வில்லா அணியுடன், ஓர் ஆண்டுக்கான ஒப்பந்தமொன்றில் அவர் கைச்சாத்திட்டுள்ளார். வாராந்தம் 77,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்ற ஊதியத்திலேயே, இந்த ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.

செல்சி அணி, பிறீமியர் லீக் பிரிவில் விளையாடுகின்ற போதிலும், அஸ்டன் வில்லா அணி, அதற்குக் கீழுள்ள சம்பியன்ஷிப் பிரிவிலேயே விளையாடுகிறது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த டெரி, தனது முடிவு குறித்து விளங்கப்படுத்தினார். “செல்சிக்கெதிராக விளையாடுவது என்ற மன ரீதியான பக்கமே, எதிர்கொள்வதற்குக் கடினமாக அமைந்தது. அந்தக் கழகத்தில், நம்ப முடியாத 22 ஆண்டுகள் சென்றிருந்தன.

இது, புதியதோர் அத்தியாயம். செல்சி அணிக்கு, எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஆனால் என்னுடைய 100 சதவீத எண்ணங்களும், இந்த அணியை பிறீமியர் லீக் பிரிவுக்குக் கொண்டு செல்வதே” என்று தெரிவித்தார். டெரிக்கான வாழ்த்துகளை, செல்சி கழகமும் வெளிப்படுத்தியது. “அஸ்டன் வில்லாவில், ஜோன் டெரிக்கு எமது வாழ்த்துகள்” என, அக்கழகம் தெரிவித்தது.

Related posts: