குஷால் பெரேரா சதம். 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி!

Monday, June 20th, 2016

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி டுப்ளின் நகரில் நடந்தது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இலங்கை அணி இமாலய ஓட்டங்களை குவித்தது. 50 ஓவரில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களை குவித்தது.

தொடக்க வீரர் குஷால் பெரேரா சதம் விளாசினார். அவர் 128 பந்தில்16 பவுண்டரி, 2 சிக்சர்கள் உட்பட 135 ஓட்டங்கள் எடுத்தார், மற்றொரு தொடக்க வீரர் குணத்திலக (63) அரைசதம் எடுத்தார். அயர்லாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பிரசன்னா 46 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 95 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.

மஹஃரூப் தன் பங்கிற்கு 29 ஓட்டங்களும், அணித்தலைவர் மேத்யூஸ் 24 ஓட்டங்களும் குவித்தனர். 378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி இலங்கையின் அபார பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது.

இதனால் 45 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மெக்பிரைன் அதிகபட்சமாக 79 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை அணி சார்பில், சுரங்க லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Related posts: