இளம் சிவப்பு பந்தால் ரிவர்ஸ் ஸ்விங் செய்வது கடினம் – மிஸ்பா உல் ஹக்!
Thursday, October 20th, 2016
பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சுழற்பந்து வீச்சு பனித்துளியால் பாதிக்கப்படுகிறது என்று மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் அடிலெய்டில் நடைபெற்றது. அதன்பின் துபாயில் பாகிஸ்தான் – மேற்கிந்தியதீவு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி துபாயில் கடந்த 13-ம் திகதி தொடங்கி இப்போட்டியில் மேற்கிந்தியதீவு அணியின் வெற்றிக்கு 346 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.
டேரன் பிராவோவின் அபார சதத்தால் வெற்றியை நோக்கி பயணித்த மேற்கிந்தியதீவு கடும்போராட்டத்திற்குப் பின் 12 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதன்முறையாக இளம்சிவப்பு பந்தில் பகல் – இரவு டெஸ்டில் விளையாடிய அனுபவம் குறித்து பாகிஸ்தான் அணியின்தலைவர் மிஸ்பா கருத்து தெரிவித்தார்.
அப்போது ‘‘பனித்துளி ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இளம்சிவப்பு பந்தின் தன்மையை பாதிக்கிறது. இதனால் பந்து அதிக அளவில் டர்ன் ஆகவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை. துபாய் ஆடுகளம் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் அதிக அளவில் வெடிப்பு ஏற்பட்டு கரடுமுரடாக காணப்படும். ஆனால், இரவில் பனி பெய்ததால் ஆடுகளம் அதிக அளவில் மாறவில்லை’’ என்றார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை பகல் – இரவு போட்டியாக நடத்த இந்தியா முயற்சி செய்தது. ஆனால், இந்தியாவில் பனித்துளி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நியூசிலாந்து பகல் – இரவு ஆட்டத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், இந்திய கிரிக்கெட் சபையும் இளம் சிவப்பு பந்து போட்டி நடத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|