இலங்கை அணி வீரர்களின் ஊதியம் அதிகரிப்பு!

Thursday, May 24th, 2018

இலங்கை கிரிக்கெட் சபை முடிவுற்ற நிதியாண்டில் ஸ்திரமான சிறந்த பெறுபேற்றை பெற்றதை அடுத்து 2018/19 காலத்திற்கான தேசிய அணி வீரர்களின் ஊதியங்களை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஊதிய அதிகரிப்புக்கு மேலாக, ஒப்பந்தம் செய்யப்பட்ட 33 வீரர்களின் அனைத்து வகை போட்டிகளும் உள்ளடங்கலாக போட்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

வீரர்கள் கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு 5000 அமெரிக்க டொலர்களை மாத்திரம் பெற்ற நிலையில் இந்த ஆண்டில் வீரர்கள் 7000 அமெரிக்க டொலர்களை பெறுவார்கள் என்று தெரியவருகிறது.

”முடிவுற்ற நிதியாண்டில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சிறந்த நிதி இலாபங்களை பெற்றதில் இருந்து, வீரர்களுக்கு அதற்கான ஊதிய அதிகரிப்பை வழங்குவது குறித்து நாம் சிந்தித்தோம். இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பிரதான பங்காற்றியுள்ளார்கள்” என்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இதன்படி, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், ரங்கன ஹெரத், சுரங்க லக்மால் மற்றும் திமுத் கருணாரத்ன பிரிவு ‘A’ இன் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதோடு, உபுல் தரங்க மற்றும் டில்ருவன் பெரேரா பிரிவு ‘B’ இன் கீழ் ஒப்பந்தமாகியுள்ளனர். குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகிய வீரர்கள் பிரிவு ‘C’ இன் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அகில தனஞ்சய, துஷ்மந்த சமீர, அசேல குணரத்ன, தனுஷ்க குணதிலக்க மற்றும் நுவன் பிரதீப் அகிய வீரர்களுக்கு பிரிவு ‘D’ இன் கீழ் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

சதீர சமரவிக்ரம, ரொஷேன் சில்வா, லஹிரு திரிமான்ன, லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், ஜெப்ரி வன்டர்சே, தசுன் ஷானக்க, கௌஷால் சில்வா, ஷெஹான் மதுஷங்க, லஹிரு குமார, மலிந்த புஷ்பகுமார, அமில அபொன்சோ, வனிந்து ஹசரங்க, இசுரு உதான, மற்றும் டில்ஷான் முனவீர ஆகிய வீரர்கள் ப்ரீமியர் வகையின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: