ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 போட்டியின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்தாடவுள்ளது.
இதனடிப்படையில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் 8 வருடங்களின் பின்னர் இலங்கையும் பாகிஸ்தானும் மீண்டும் சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசிய கிண்ண இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் 2014 ஆம் ஆண்டு பங்களாதேஷில் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்ட போது 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை ஆசிய கிண்ணத்தை 5 ஆவது தடவையாக சுவிகரித்திருந்தது.
50 ஓவர் கிரிக்கெட் வகையிலேயே இலங்கை 5 தடவைகளும் ஆசிய சம்பியனாகியிருந்தது.
2014 ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை, அதே பங்களாதேஷ் மண்ணில் ஒரு மாதம் கடந்து இந்தியாவை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடமும் ஆசிய கிண்ணத்தையும் உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்து இலங்கை வரலாறு படைக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்றில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, 2 ஆவது போட்டியில் பங்களாதேஷை 2 விக்கெட்களால் வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
சுப்பர் 4 சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை, ஆப்கானிஸ்தானை 4 விக்கெட்களாலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான இந்தியாவை 6 விக்கெட்களாலும் வெற்றிகொண்டது.
பாகிஸ்தானை சுப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில். இலங்கை இன்றையதினம் (9) சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டியின் முடிவு இரண்டு அணிகளுக்கும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது போதிலும் இரண்டு அணிகளுக்கும் ஒத்திகை இறுதி ஆட்டமாக இது அமையவுள்ளது.
எனவே இரண்டு அணிகளும் தத்தமது பலத்தையும் பலவினத்தையும் இன்றைய போட்டியில் பரீட்சிக்கவுள்ளன.
இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறுவதால் நாணய சுழற்சி முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.
இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 2 அரைச் சதங்கள் அடங்கலாக 155 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க ஒரு அரைச் சதம் அடங்கலாக 110 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 96 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க 88 ஓட்டங்களையும் பெற்று தத்தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் இன்றைய போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் இலங்கை வெற்றிபெறுவதற்கு துடுப்பாட்டத்தில் பெரும் பங்காற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கிண்ணத்தின் மூலம் சர்வதேச இருபது 20 இல் அறிமுகமான டில்ஷான் மதுஷன்க 6 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
இந்த வீரர்களுடன் ஏனைய இலங்கை வீரர்களும் தங்களது அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி கடைசி இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பார்கள் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணியிலும் அதிசிறந்த வீரர்கள் இருக்கின்றனர்.
இந்த சுற்றுப் போட்டியில் அபாராமாகத் துடுப்பெடுத்தாடி வரும் மொஹமத் ரிஸ்வான் 2 அரைச் சதங்களுடன் 212 ஓட்டங்களை மொத்தமாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச இருபது 20 துடுப்பாட்ட வரிசையில் பாபர் அஸாமை பின்தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக பக்கார் ஸமான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 83 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் பக்கார் ஸமான் (8 விக்கெட்கள்). ஷதாப் கான் 7 விக்கெட்களையும், நசீம் ஷா 6 விக்கெட்களையும் பெற்று தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் போட்டியில் நேற்றையதினம் இந்திய அணி 101 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நேற்றையதினம் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 122 ஓட்டங்களையும், அணித்தலைவர் கே.எல்.ராகுல் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். விராட் கோலி சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளில் பெற்ற கன்னிச்சதம் இதுவாகும்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின்பரீத் அஹமட் 57 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 213 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், முஜிபுர் ரஹ்மான் 18 ஓட்டங்களையும், ரஷித் கான் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 04 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் போட்டி ஒன்றில் இவர் பெற்ற அதிக விக்கெட் எண்ணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


