பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு!

Wednesday, January 11th, 2017

பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை “அறியப்படாத ஆதாரப் பொருள்” ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொருள் சிலிக்கானாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

உலகம் எவ்வாறு உருவானது என்பது பற்றி இன்னும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு உதவும்.

“இன்னொரு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது சிலிக்கான் என நாங்கள் நம்புகிறோம் பூமியின் உள்மையப்பகுதியின் எடையில் சுமார் 5 சதவீதம் இருக்கும் இது, இரும்பு-நிக்கல் உலோக கலவையில் கலந்திருக்கலாம்” என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டோக்கியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஈஜி ஒக்டானி பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

1,200 கிலோமீட்டர் ஆரமுடைய பூமியின் உள்மையப்பகுதி திடமான ஒரு பந்து போன்றதாக கருதப்படுகிறது.

பூமியின் உள்மையப்பகுதி மிகவும் ஆழத்தில் இருப்பதால், நேரடியாக இதனை ஆய்வு செய்ய முடியாது. எனவே இந்தப் பகுதிக்குள் அதிர்வலைகளை உட்புகச் செய்து அதன் மூலம் அப்பகுதி எதனால் ஆனது என்பதைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள பூமியின் உள்மையப்பகுதி, 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றை சேர்த்து பார்த்தால் 5 சதவீதம் எஞ்சியுள்ளது. அந்த 5 சதவீத பொருளை பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஈஜி ஒக்டானியும், அவருடைய அணியினரும் இரும்பு மற்றும் நிக்கல் கலவையை உருவாக்கி, அதனை சிலிக்கானோடு சேர்த்தனர்.

பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற அதே அளவு அதிக அழுத்தங்களுக்கும், தட்டவெப்ப நிலைக்கும் அதனை உட்படுத்தினர்.பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கின்ற அதிர்வலை தரவுகளோடு இந்த கலவை பொருந்தியுள்ளது.

ஆனாலும், சிலிக்கான் இருப்பதை உறுதி செய்ய இன்னும் அதிக ஆய்வுகள் நடத்த வேண்டியுள்ளது. பிற ஆதாரப் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை இது தவிர்க்கவில்லை என்று பேராசியரியர் ஒக்டானி கூறியிருக்கிறார்.

“இத்தகைய சோதனைகள் உண்மையிலேயே உற்சாகத்தை தருகின்றன. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமி உருவானபோது, பூமியின் மையம் பூமியின் பாறை போன்ற பகுதிகளிலிருந்து முதலில் பிரிந்து வர தொடங்கியபோது, அதன் உள்மையப்பகுதி எப்படி இருந்தது என இந்த பரிசோதனைகள் காட்ட முடியும் என்பது இதற்கு காரணமாகும்” என்று இந்த ஆய்வு பற்றி குறிப்பிடுகையில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கேம்பிரிட்ஃஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீமோன் ரெட்ஃபெர்ன் தெரிவித்திருக்கிறார்.

“ஆனால், ஆக்ஸிஜனும் பூமியின் உள்மையப்பகுதியில் இருக்கும் முக்கிய ஆதாரப் பொருளாக இருக்கலாம் என்று பிற ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன” என்றார் அவர்.அங்கு என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கூறினால், ஆக்ஸிஜன் குறைந்த சூழ்நிலைகள் என்று அறியப்படும், ஆக்ஸிஜன் மிகவும் குறைவான பகுதியாக பூமியின் ஆரம்ப கட்ட உள்பகுதி இருந்ததா? அல்லது ஆக்ஸிஜன் உடைய சூழ்நிலைகள் என்று விவரிக்கப்படும் வகையில் ஆக்ஸிஜன் இருக்கின்ற பகுதியாக அமைந்ததா? என்பதை அறிய இவை உதவும்.

போரசிரியர் ஈஜி ஒக்டானியின் ஆய்வு முடிவுகள்படி, 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அதிக அளவிலான சிலிக்கான் பூமியின் உள்மையப்பகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்தால், பூமியின் பிற பகுதிகளில் ஓரளவு அதிகமான ஆக்ஸிஜனை நிரப்பியிருக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக, பூமியின் மையப்பகுதியில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்பட்டிருந்தால், மையப்பரப்பை சுற்றியுள்ள பாறையாலான மேண்டில் என்ற பகுதிக்கு, ஆக்ஸிஜன் குறைவாகவே கிடைத்திருக்கும்.

“நம்முடைய புரிதல்களுக்கு கூடுதல் அம்சங்களை இந்த சமீபத்திய முடிவுகள் வழங்கியிருந்தாலும், இதுவே இறுதியானவை என்று கூறுவதற்கில்லை” என பேராசிரியர் ரெட்ஃபெர்ன் குறிப்பிட்டுள்ளார்.சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் இலையுதிர்கால கூட்டத்தில் இந்த ஆய்வை போரசிரியர் ஈஜி ஒக்டானி சமர்ப்பித்தார்.

_93337733_93803a96-8347-4e30-823e-ce504fd4fc65

Related posts: