உலகில் வனவிலங்குகள் தொகை 58 வீதமாக வீழ்ச்சி!
Friday, October 28th, 2016
உலகளாவிய வன விலங்குகளின் எண்ணிக்கை 1970 தொடக்கம் 58 வீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
இந்த போக்கு தொடர்ந்தால் 2020 ஆம் ஆண்டாகும்போது முள்ளந்தண்டுள்ள விலங்குகள் மூன்றில் இரண்டாக குறைவடையும் என்று இலண்டன் விலங்கியல் சமூகம் மற்றும் டபிள்யூ.டபிள்யூ.எப் மேற்கொண்ட வன விலங்குகள் தொடர்பான மதிப்பீடு கணித்துள்ளது.
ஏரிகள், ஆறுகள் மற்றும் ஈரநிலங்களில் வாழும் விலங்குகளே பெரும் அழிவை சந்தித்து விருவதாக அந்த தரவுகள் கணித்துள்ளன. வாழ்விட இழப்பு, வனவிலங்கு வர்த்தகம், சூழல் மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம் உட்பட மனித செயற்பாடுகளும் வனவிலங்குகளின் அழிவுக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 4,000 பறவைகள், மீன்கள், பாலூட்டிகள், நீர், நில வாழ்வன மற்றும் ஊர்வன ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.
கடந்த அரை நூற்றாண்டில் இரட்டிப்பாகப் பெருகியுள்ள மனிதர்கள், தங்களது பசிக்காக, பூமி கிரகத்தில் உள்ள தன்னுடன் வாழும் மற்ற உயிரினங்களை உண்பது, அவற்றை விஷமிட்டு கொல்வது என முற்றிலுமாக அழித்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Related posts:
|
|