QR குறியீட்டு முறைமையூடாக இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு – 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமையுடாக எரிபொருள் விநியோகம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 29th, 2022

நாடுமுழுவதும் உள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 692 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 109 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 44 இலட்சம் வாகனங்களில், 39 இலட்சத்து 45 ஆயிரத்து 899 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

4 இலட்சத்து 91 ஆயிரத்து 756 வாகனங்கள் டீசலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களில், அதிக எண்ணிகையிலானவை உந்துருளிகளாகும். இதற்கமைய, 25 இலட்சத்து 71 ஆயிரத்து 838 உந்துருளிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

7 இலட்சத்து 85 ஆயிரத்து 360 முச்சக்கர வண்டிகளும், 6 இலட்சத்து 14 ஆயிரத்து 662 கார்களும், 2 இலட்சத்து 22 ஆயிரத்து 663 வான்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 972 பாரவூர்திகளும், 29 ஆயிரத்து 755 பேருந்துகளும், 16 ஆயிரத்து 213 விசேட தேவை வாகனங்களும், 4 ஆயிரத்து 992 பிற வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: