ATM மோசடி – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடன் அறிவிக்கவும்!

Thursday, February 7th, 2019

பணம் மீளப்பெறும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கண்காணிப்புக் கமராவுக்கு பதிவாகாத வகையில் முகத்தை மறைத்த வண்ணம் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து, அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

ATM, கடனட்டை தரவுகளைச் சேகரித்து, போலி அட்டைகளைத் தயாரித்து பணம் மோசடி செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடனட்டை பொருத்தியிருக்கும் இடங்களில் சில உபகரணங்களைப் பொருத்தி அதன் மூலம் கடனட்டைகளின் தகவல்களைச் சேகரித்து அதனை தமது அலைபேசிகளில் தரவேற்றிக்கொண்டு, அதனைப் பயன்படுத்தி போலி கடனட்டைகள் தயாரித்து பணக் கொள்ளையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கமைய ஜனவரி மாதம் 20ஆம் திகதி கோட்டை செத்தம் வீதியில் வைத்து சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார். 21ஆம் திகதி வௌ்ளவத்தைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சீனப் பிரஜையும், பெப்ரவரி 03ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் வைத்து ருமேனியா நாட்டுப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி கடனட்டைகள் 200, 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், தகவல்களைச் சேமிக்கும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சீன நாட்டைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் இன்று(07) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்களை 13ஆம் திகதி வரையும், ருமேனியப் பிரஜை பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 18ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: