பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, January 17th, 2024

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 3ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்பதாக 2023 ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றை இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் எடுத்த தீர்மானம் காரணமாக, பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பாகம் வெளிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. பின்னர் வினாத்தாளின் முதலாம் பாகத்தை இரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 1 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 முதல் 11.40 வரை மீண்டும் நடைபெற உள்ளது.

முதல் பாகம் அதே நாள் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: