60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

Tuesday, December 6th, 2016

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல், ‘புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.

அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  ராஜாஜி மண்டபத்துக்கு வந்திருந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார். பிறகு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையைச் சுற்றி வந்து பால் தெளித்தார். ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் காலமானார்.

முதல்வர் மறைவை அடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதே போல, மாநில முதல்வர்கள் நாராயணசாமி, சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், சிவ்ராஜ் சிங் சௌஹான், பினராயி விஜயன், தேவேந்திர ஃபட்னவிஸ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏராளமான கலைத் துறையினரும், பல முக்கியப் பிரபலங்களும் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

லட்சக்கணக்கான தமிழக மக்கள் அலைகடல் என திரண்டு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

சரியாக மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ராணுவ பீரங்கி வாகனத்தில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டது.

ராஜாஜி அரங்கில் இருந்து மாலை 4.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  எம்ஜிஆர் நினைவிடத்தை நோக்கி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மாலை சரியாக 6 மணியளவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

jaya_4

Related posts: