32 இந்திய மீனவர்கள் விடுதலை!

Thursday, April 7th, 2016

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களை,இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் அடிப்படையில் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள், விடுதலை செய்ததாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2 நாட்டுப் படகுகளுடன் காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் விடுதலை செய்தார். ஜனவரி 16 ஆம் திகதி 1 படகுடன் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்களும், ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இரண்டு விசைப்படகுடன் கைதான புதுக்கோட்டை ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 9 மீனவர்களும், மார்ச் மாதம் 10 ஆம் திகதி காரைநகருக்கு தெற்கே 1 விசைப்படகுடன் கைதான தமிழ்நாடு இராமநாதபுரம் பகுதியினை சேர்ந்த 4 மீனவர்களும், மார்ச் மாதம் 12 ஆம் திகதி  1 விசைப்படகுடன் கைதான இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களும் மார்ச் 23 ஆம் திகதி 1 படகுடன் நெடுந்தீவுக்கு மேற்கே கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 3 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் விடுதலை செய்தார்.

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், அவர்களது படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: